Followers

Thursday, June 9, 2016

மகாகவி பாரதி போன்றவர் ராஜா சார்! - பாடகர் ஸ்ரீராம் பார்த்தசாரதி


மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பி.பி.ஸ்ரீநிவாஸின் குரலைக் கேட்டால் நம் மனதுக்கு எவ்வளவு இதமாக இருக்குமோ, அதேபோன்ற ஓர் இதம் தரும் குரல் ஸ்ரீராம் பார்த்தசாரதி உடையது. ‘இளங்காத்து வீசுதே’ பாடல் மூலம் பரவலான வெளிச்சம் பெற்றவர். கர்நாடக இசை உலகின் ஜாம்பவான்கள் ஓ.எஸ்.தியாகராஜன் மற்றும் நெய்வேலி சந்தானகோபாலனிடம் முறைப்படி இசை பயின்றவர். இளம் தலைமுறையின் ப்ளேலிஸ்டில் இவருக்குதான் முதலிடம்!
“எங்க குடும்பத்தில் மூணு தலைமுறையா இசைஞானிகிட்டதான் வொர்க் பண்ணிட்டு இருக்கோம். எங்க தாத்தா வீணை வித்வான் ராகவன், என் அப்பா வீணை வித்வான் பார்த்தசாரதி ரெண்டு பேரும் இளையராஜா குழுவுலதான் வீணை வாசிச்சிட்டு இருந்தாங்க. இதனால, இளையராஜா என்னோட குடும்பத்துக்கு ரொம்ப நெருக்கம். என் இசைக் கச்சேரியை முன்வரிசையில இருந்து இளையராஜா கேட்டதுனாலதான், எனக்கு சினிமா பாடல்களைப் பாடுவதற்கான வாய்ப்பு சுலபமா அமைஞ்சது.
ஒருநாள், ‘பிதாமகன்’ படத்தில் ஒரு பாடலைப் பாட என்னை இசைஞானி கூப்பிட்ட நேரம், நான் ஊர்ல இல்ல. பிறகு, அந்த வாய்ப்பு பாடகர் மது பாலகிருஷ்ணனுக்கு போயிடுச்சு. விஷயம் தெரிஞ்சு நான் ஓடி வந்ததும், எனக்கு லைட்டா ஒரு ஃபோல்க் பாடல் கொடுத்தார். அதுதான் ‘இளங்காத்து வீசுதே’. நான் தவறவிட்ட வாய்ப்பு எனக்கு நல்லதா அமைஞ்சுடுச்சு.
இசைஞானிகிட்டே ஒருத்தர் பாடிட்டாங்கன்னா அவங்க எந்த இசையமைப்பாளர்கிட்டேயும் பாடிடுவாங்க. இளையராஜா இசை அமைத்த எல்லா மொழிப் பாடல்களிலும், இன்னைக்கி இருக்கிற இளம் பாடகர்கள்ல, நான்தான் நிறையப் பாடல்களைப் பாடியிருக்கேன். ‘எனக்கு ரொம்ப பிடிச்ச பாடகர் ஸ்ரீராம்’னு ராஜா சார், பாடகி சாதனா சர்கம்கிட்ட பெருமையா சொன்ன அந்தத் தருணம் என்னால மறக்கவே முடியாது. ‘உளியின் ஓசை’ திரைப்படத்துல நான்கு பாடல்களைப் பாடுற வாய்ப்பை எனக்கு இளையராஜா கொடுத்தார். அந்தப் படத்துல வர்ற பாடல்கள் அனைத்தும் கர்நாடக சங்கீதம் பேஸ்ல இருந்தது.
இதுமட்டும் இல்லாம, ‘ரமணா சரணம் சரணம்’னு ரமண மகரிஷி பற்றிய ஆல்பத்தில், அவரே எழுதிய ‘பரம்பொருள்தானே அருணாசலம்’ என்கிற பாடலை என்னைப் பாடவைத்தார். ஒருதடவை என்னோட ‘ஜுகல்பந்தி கான்செர்ட்’க்கு அவர் வந்து, முதல் வரிசையில் உட்கார்ந்து, கச்சேரி முழுக்க கேட்டு, பின்னர் மேடையேறி வந்து எங்களை வாழ்த்திப் பேசினது... பெரிய பெருமை எனக்கு.
என்னைப் பொறுத்தவரை, இளையராஜா மகாகவி பாரதி மாதிரி. கர்நாடக இசையோ, மேற்கத்திய இசையோ எந்த வகையான இசையாக இருந்தாலும் அந்த இசைச் சித்தரால், உடனே நூறு படைப்புகளைத் தரமுடியும். ‘தளபதி’ திரைப்படத்துல கவிஞர் வாலி சார் ‘சின்னத் தாயவள் தந்த ராசாவே’னு ஒரு பாடல் எழுதி இருப்பார். ராஜா சாரோட அம்மா பெயர் ‘சின்னத்தாய்’. இந்த மாதிரி சில பாடல்கள் உருவான கதைகள் ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கும். கமல்- ராஜா, மணிரத்னம் -ராஜா, பாலுமகேந்திரா - ராஜா இப்படி சில காம்பினேஷன் பாடல்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
ஒருமுறை திருவண்ணாமலைக்கு ‘ரமண ஜெயந்தி’க்கு பாடுவதற்கு ராஜா சார் என்னைக் கூட்டிட்டுப் போனார். அங்கே சுவாமி முன்னாடி என்னைத் தனியா பாடவைத்து, அந்தக் கடவுளின் அருள் எனக்கு கிடைக்கப்பெறச்செய்து என்னை மெய்சிலிர்க்க வைத்தார் ராஜா சார். எத்தனை பெருந்தன்மை இசை பிதாமகனுக்கு! நான் ரொம்ப நெகிழ்ச்சியா உணர்ந்த தருணம் அது!” - கண்கள் மின்ன முடித்தார் ஸ்ரீராம் பார்த்தசாரதி.இளையராஜாவுக்காக சட்டென அந்தத் தருணத்தில் ஸ்ரீராம் பார்த்தசாரதியே மெட்டுப்போட்டு, பாடல் எழுதி, அதைப் பாடி வாழ்த்தியது, ஸ்ரீராமின் திறமைக்கும், அவர் ராஜா மீதுகொண்டுள்ள அன்புக்கும் சான்று!
பகிர்வுத் தாெ குப்பு,
- மனம்.

No comments: