Followers

Saturday, January 10, 2015

ரத்த பரிசோதனையிலேயே கேன்சரை கண்டறியலாம்

அறிகுறிகள்:
சளியில் ரத்தம் வருதல்
ரத்த வாந்தி
கறுப்பு நிறத்தில் மலம்
மலத்தில் ரத்தம்
சிறுநீரில் ரத்தம் கசிதல்
அதிக ரத்தப்போக்கு
மாதவிடாய் நின்றபிறகும் ரத்தப்போக்கு
குடிப்பழக்கம், சிகரெட், புகையிலை போன்ற தீய பழக்கவழக்கங்கள் உடையவர்களுக்கு மட்டுமே கேன்சர் வியாதி தாக்கும் என்ற நிலை மாறி, டீடோட்டலராக உள்ள 25 வயது இளைஞர்கள் கூட இன்று கேன்சர் நோயாளிகளாக இருக்கிறார்கள். ஆண், பெண், வயது என எந்த பாரபட்சமின்றி அனைத்து தரப்பினருக்கும் கேன்சர் வியாதி தொற்றிக் கொள்ள வாய்ப்புள்ளது என்பதே நிதர்சனமான உண்மை.
மேலை நாடுகளைப் போல நாமும் ஒவ்வொரு பிப்ரவரி மாதத்தில் உலக கேன்சர் தினத்தை கடைபிடித்து வருகிறோம். ஆனாலும், நம்மிடையே கேன்சர் பற்றி பெரிய அளவில் விழிப்புணர்வு இல்லை. எந்த வியாதியாக இருந்தாலும் ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்தால் சரியான சிகிச்சை மூலம் குணமாக்க முடியும். அதே போலத்தான் கேன்சரும் என்கிறார் பாரத் ஸ்கேன்ஸ் நிர்வாக இயக்குனர் டாக்டர் இம்மானுவேல். இதோ அவர் கூறியதாவது...
கேன்சர் பற்றி நம் மக்களிடையே விழிப்புணர்வு இல்லை என்பது உண்மைதான். கேன்சருக்கு மருந்தே கிடையாது. கேன்சர் வந்தால் இறந்து விடுவோம் என்றுதான் நினைக்கிறார்கள். ஆனால், தற்போதைய மருத்துவ துறையில் அதிநவீன தொழில்நுட்பங்கள் வந்துள்ளன. சாதாரண ரத்த பரிசோதனையிலேயே கேன்சர் இருக்கிறதா இல்லையா என்பதை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் அளவுக்கு மருத்துவம் முன்னேறியுள்ளது.
ஆரம்ப கட்டத்திலேயே கேன்சரை கண்டறிந்தால், சரியான சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும்.
கேன்சரை பொறுத்த வரை, டயக்னோசிஸ் ரொம்பவே முக்கியம். கேன்சர் கட்டி உடலில் எந்த இடத்தில் உள்ளது, எங்கெங்கு பரவியிருக்கிறது என்பதை கண்டறிவதே டயக்னோசிஸ். இதில் சரியான ரிப்போர்ட் கொடுத்தால் மட்டுமே டாக்டர்களால் தகுந்த சிகிச்சையை வழங்க முடியும். டயக்னோசிஸ் 2 வகைப்படும். ஒன்று, சாதாரண ரத்த பரிசோதனை, மற்றொன்று, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்கேன் கருவி. ரத்த பரிசோதனையின் மூலம் கொழுப்பு, சர்க்கரை அளவை மட்டுமே தெரிந்து கொள்ள முடியும் என்றில்லை.
சிஏ125 என்ற டெஸ்ட் மூலம் கருப்பையில் கேன்சர் உள்ளதா என்பதை கண்டறியலாம். சிஏ19.3 டெஸ்ட் மூலம் பித்தப்பை, கணையத்தில் கேன்சர் உள்ளதா என்பதையும், ஏஎப்பி டெஸ்ட் மூலம் கல்லீரலிலும், சிஇஏ மூலம் பெருங்குடலிலும் கேன்சர் இருக்கிறதா என்பதை கண்டறியலாம். இது போல, நுரையீரல், எலும்பு, தைராய்டு போன்ற இடங்களில் கேன்சர் உள்ளதா என்பதை ரத்த பரிசோதனையின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். அதனால், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்து கொள்ள வேண்டியது அவசியம்.
அத்துடன் கேன்சருக்கான பிரத்யேக டெஸ்ட்களும் எடுத்துக் கொள்வது நல்லது. ரத்த பரிசோதனையில் கேன்சர் இருப்பது தெரிந்தால், அதை சிடி, எம்ஆர்ஐ, எக்ஸ்ரே போன்ற ஸ்கேன் டெஸ்ட் மூலம் உறுதிபடுத்திக் கொள்ளலாம். இதில், தற்போதைய நவீன தொழில்நுட்படம் பிஇடி/சிடி ஸ்கேன் கருவியாகும். இதன் சிறப்பு, உடலில் கேன்சர் கட்டி இருப்பதை பிஇடி கருவி உறுதி செய்யும், அதே நேரத்தில் எந்த இடத்தில் கேன்சர் இருக்கிறது என்பதை சிடி ஸ்கேன் உறுதி செய்யும்.
இவை இரண்டும் இணைந்து இருப்பதால், துல்லியமான ரிப்போர்ட் நமக்கு கிடைக்கும்.உடலில் எந்த இடத்தில் கேன்சர் கட்டி இருக்கிறது, வேறு எங்காவது பரவியிருக்கிறதா அல்லது எங்கிருந்து இன்னொரு இடத்திற்கு பரவியிருக்கிறது என்பதையும் இந்த ஸ்கேன் தெளிவாக காட்டிவிடும். இதன் ரிப்போர்ட்டை வைத்தே முறையான சிகிச்சை தொடங்கப்படும். சிகிச்சையின் போதும், 2 மாதத்துக்கு ஒருமுறை பிஇடி/சிடி ஸ்கேன் டெஸ்ட் எடுத்துக் கொள்வது நல்லது. அப்போதுதான், நாம் உட்கொள்ளும் மருந்து நமது உடலுக்கு ஒத்துக்கொள்கிறதா, கேன்சரின் வீரியம் குறைந்துள்ளதா என்பதையும் தெரிந்து கொள்ள முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
இது பெண்களுக்காக...
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனைவருமே ஆண்டுக்கு ஒருமுறை மார்பக பரிசோதனை செய்து கொள்வது அவசியம். இது கேன்சருக்காக மட்டுமல்ல, மார்பகத்தில் எந்த பிரச்னையும் இல்லை என்பதை நீங்களே உறுதிப்படுத்திக் கொள்வதற்கே. இதில், மாமோகிராம் பரிசோதனை நவீனமானது. அதிலும், வலியில்லாத டிஜிட்டல் மாமோகிராம் பரிசோதனையும் வந்துள்ளது. டிஜிட்டல் மாமோகிராமில் வலி இருக்காது, ரேடியேஷன் மிகக்குறைவு என்கிறார் டாக்டர் இம்மானுவேல்.

No comments: