Followers

Wednesday, February 3, 2016

நமது வாழ்க்கையிலும் கடமை என்று வந்துவிட்டால் அதற்குத்தான் முதலிடம் கொடுக்க வேண்டுமே தவிர, அதைப் புறம் தள்ளக்கூடாது

மரியாதை.
பாற்கடலில் பரந்தாமனான பெருமாள் பள்ளிகொண்டிருந்தார். அவரது தலைக்கு ஆதிசேஷ பாம்பு குடைபிடித்திருந்தது. காலில் பாதரட்சை அணிந்திருந்தார். பெருமாள் உறங்கிக்கொண்டிருந்த நேரத்தில் இருவரும் பேசிக்கொண்டனர். இப்போது பெருமாள் தூங்கிக் கொண்டுதானே இருக்கிறார். நாம் இருவரும் வெளியே போய் சற்று வேடிக்கை பார்த்துவிட்டு, தேவலோகத்தில் ரம்பையர்கள் ஆடும் நடனத்தை ரசித்து வருவோமே என்றது பாம்பு.பாதரட்சை மறுத்துவிட்டது. பெருமாளின் பாதத்திற்கு சேவை செய்வதைவிட சிறந்த இன்பம் வேறு ஏதும் இல்லை. எனவே நான் வரவில்லை. நீ வேண்டுமானால் போய் வா என சொல்லிவிட்டது.
பரந்தாமன் இவ்வுலகில் நடக்கும் அனைத்தையும் கவனிப்பவர்.
ஒவ்வொரு உயிரின் நடவடிக்கையையும் அவர் தனது பதிவேட்டில் பதிந்துவிடுவார். அப்படியிருக்க தன் அருகிலேயே இருக்கும் பாம்பையும், பாதரட்சையையும் அவர் கவனிக்காமல் இருப்பாரா என்ன! அவர் தூங்குவது போலவே நடித்துக்கொண்டிருந்தார். பாம்பு அங்கிருந்து வேடிக்கை பார்க்க புறப்பட்டு விட்டது. பெருமாள் அதைப்பற்றி கண்டுகொள்ளவே இல்லை.
ராமாவதார காலம் வந்தது. தனது செருப்பை கழற்றி பரதனுக்கு கொடுத்தார். அந்த திருவடியை வைத்து பரதன்ஆட்சி நடத்தினான். செருப்பை பாதுகாக்க ஒரு குடையை அமைத்தார். அந்த குடைதான் முற்பிறவியில் ஆதிசேஷனாக இருந்த பாம்பு. இப்போது செருப்புக்கு பாம்பு குடைபிடிக்க வேண்டிய அவசியம் வந்துவிட்டது. இதைத்தான் பாதுகா பட்டாபிஷேகம் என்பார்கள்.
இறைவனுக்கு மட்டுமல்ல, நமது வாழ்க்கையிலும் கடமை என்று வந்துவிட்டால் அதற்குத்தான் முதலிடம் கொடுக்க வேண்டுமே தவிர, அதைப் புறம் தள்ளக்கூடாது என்பதை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.

No comments: